



ஆஷகள் ஆயிரம்
ஒரு வடக்கன் செல்ஃபி புகழ் ஜி.ப்ரஜித்தின் இயக்கத்தில் ஜெயராம், காளிதாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆஷகள் ஆயிரம் மலையாள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

கதைக்களம்
25 ஆண்டுகளாக மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார் ஹரிஹரன் (ஜெயராம்). அவரது மகன் அஜீஷ் (காளிதாஸ்) சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.

இதனால் அவருக்கு எந்த வருமானமும் இல்லாததால், ஹரிஹரனின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது.
வேலையில் ஹரிஹரனுக்கு உள்ள நெருக்கடியில், அஜீஷ் ஏற்படுத்தும் விபத்திற்கு சம்பளத்தின் ஒரு பகுதியை நஷ்ட ஈடாக ஹரிஹரன் கொடுக்க அப்பா-மகன் இடையே வாக்குவாதம் பெரிதாகிறது.
இந்த சூழலில் சுமித் ராகவன் (ஷரப் உதீன்) என்ற புகழ்பெற்ற நடிகர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடக்க, அங்கே தனக்கு ஒரு வேடம் கிடைக்குமா என்று பார்க்க அஜீஷ் செல்கிறார்.
ஆனால், கூட்டத்தில் நிற்க ஆட்கள் வேண்டும் என்று உதவி இயக்குநர் தேட, ஹரிஹரனை கெஞ்சி கேட்டு நிற்க வைக்கிறார்.
அவரோ, ஹீரோ சுமித் சரியாக நடிக்காததால் சிரித்துவிட, "இந்த காட்சியை நீ நடித்துக்காட்டு பார்ப்போம்" என்று ஹரிஹரனிடம் சவால் விடுகிறார்.
வேறு வழியின்றி அந்த காட்சியை அவர் நடித்துக்காட்ட, சுற்றியிருப்பவர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
மேலும் இணையத்திலும் அந்த வீடியோ வைரலாகிறது.
அதன் பின்னர் ஹரிஹரன், அஜீஷ் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? தனது கனவை அஜீஷ் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
அப்பா-மகன் இடையேயுள்ள உரசல்; அது எப்படி சரியாகிறது என்ற கதைக்கருவை முடிந்தவரை சுவாரசியமாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் ஜி.ப்ரஜித்.
முதல் பாதி சில திருப்பங்களுடன் கலாட்டாவாக சென்று பீக்மொமெண்ட் இடைவேளையாக முடிகிறது. ஆனால் இரண்டாம் பாதி மெதுவாக ஆரம்பிக்கிறது.
ஒரு சவால் ஏற்பட்ட பின்னர் வேகம் எடுக்கும் திரைக்கதை , இறுதியில் ஃபீல் குட் ட்ராமாவாக முடிகிறது.
இப்படத்தை மொத்தமாக தோளில் சுமப்பது ஜெயராம் என்றே கூறலாம். காமெடியை அசால்ட்டாக செய்யக்கூடிய நடிகர் ஜெயராம், இப்படத்தில் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.
தன்னை ஏளனமாக பார்த்தவர்கள் முன் வெற்றிக்கு பின் கெத்தாக நடப்பது, மகனுக்கு சவால் விடுவது, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும்போது காட்டும் முகபாவனை என ஜெயராம் அட்டகாசம் செய்துள்ளார்.
காளிதாஸ் துடிப்பான இளைஞராக யதார்த்தமாக நடித்துள்ளார். அப்பாவுடன் போட்டிபோடுவது, வாய்ப்பு பறிபோகும்போது ஏமாற்றம் என அவரும் தன்னால் முடிந்த நடிப்பை பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் உடைந்து அழும்போது, உண்மையிலேயே தன் அப்பாவிற்கு தன்னை நிரூபிக்க போராடுவதை உணர்த்துவதுபோல் நடித்தது எமோஷனல் டச்.
யூகிக்கக்கூடிய பல காட்சிகள் இரண்டாம் பாதியில் படத்தின் சுவாரஸ்யத்தை குறைகிறது. எனினும் ஜெயராம், காளிதாஸ் மற்றும் ஷரப் ஆகியோர் தங்களது நடிப்பால் அந்த குறையை சரி செய்கின்றனர்.
ஷரப் இரண்டு காட்சிகளில் மிரட்டி விட்டார். ஆனால் அவர் பாதி படத்திற்கு மேல் காணாமல்போய் திடீர் என என்ட்ரி கொடுப்பது ஒட்டவில்லை.
ஆஷா ஷரத் கணவருக்காக பேசுவதா, மகனுக்காக பேசுவதா என்ற குழப்பத்தை அழகாக வெளிப்படுத்துகிறார்.
ஊறுகாய்க்கு காசு வாங்கும் காட்சியில் யதார்த்ததை உணர்த்துகிறார்.
படம் முழுக்க இருக்கும் காமெடி காட்சிகள் நம்மை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு நேர்த்தியாக எழுதியுள்ளனர் ஜூட் ஆந்தணி ஜோஸப், அரவிந்த் ராஜேந்திரன்.
சனல் தேவின் பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பு. ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு அருமை.
க்ளாப்ஸ்
ஜெயராம், காளிதாஸ்
காமெடி காட்சிகள்
எமோஷனல் டச்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியின் ஆரம்பத்தை இன்னும் சுவாரசியப்படுத்தியிருக்கலாம்
மொத்தத்தில் இந்த ஆஷகள் ஆயிரம் விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதை ரசிக்கும்படி திரையில் காட்டியிருக்கிறது. குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கக்கூடிய படம்தான்.
ரேட்டிங்: 2.75/5
Source: Entertainment News