கிடாயின் கருணைமனு என்ற மிகச்சிறந்த படத்தை தமிழ் மக்களுக்கு கொடுத்து பெரிய சாதனைகள் செய்வார் என எதிர்பார்த்த சுரேஷ் சங்கையா சீக்கிரமே இறந்துவிட்டார், அவரின் கடைசி படமான கெணத்த காணோம் யோகிபாபு நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவர, படம் எப்படியுள்ளது? பார்ப்போம்.

கதைக்களம்



கெணத்த காணோம் திரை விமர்சனம் - Related Image

தண்ணியே இல்லாத ஊர், மழை பெய்ய வேண்டும் என வேண்டி, ஒப்பாரி வைக்கும் அளவிற்கு இருக்கும் ஊரில் யோகிபாபு பூசாரியாக உள்ளார்.

அவருக்கு வயது ஆனாலும் திருமணம் ஆகவில்லை, யோகிபாபு, லவ்லினை காதலிக்கிறார், ஆனால், லவ்லின் அப்பாவோ தண்ணி இருக்கும் ஊரில் தான் பெண்ணை கட்டி கொடுப்பேன் என்கிறார்.



கெணத்த காணோம் திரை விமர்சனம் - Related Image

இதனால் யோகிபாபு திருமணம் நடக்காமல் இருக்க, பிறகு ஊரில் நீரோட்டம் பார்க்கும் போது, யோகிபாபு வீட்டில் தண்ணி இருப்பதாக நீரோட்டம் பார்ப்பவர் சொல்கிறார்.

தனக்கும் திருமணம் நடக்க வேண்டும், ஊருக்கும் தண்ணி வேண்டும் என யோகிபாபு தன் வீட்டு நிலத்தில் கிணறு வெட்ட அனுமதிக்க, அந்த கிணற்றில் தண்ணீர் வரும் முன்பு, வேறு ஒன்று வர அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.



கெணத்த காணோம் திரை விமர்சனம் - Related Image

படத்தை பற்றிய அலசல்

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார், இருந்தாலும் தனக்கே உரிய நக்கல், நய்யாண்டி கவுண்டர் வசனங்கள் மூலம் கலக்குகிறார், எமோஷ்னல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

நாயகியாக வரும் லவ்லின் புல்லட் ஓட்டிகொண்டு கட்டினால் யோகி பாபுவை தான் கட்டுவேன், நீ என்னைய படிக்க வச்சுருக்க, என்னை நம்பி அனுப்பு அப்பா, இவன நம்பியா அனுப்பவ? என்று அப்பாவிடமே சண்டை செய்து யோகிபாபுவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கும் ரக்கட் புரட்சி பெண்ணாக மனதில் நிற்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலமே நேட்டிவிட்டி தான், அப்படியே நம் கண்முன் ஒரு கிராமத்தை கொண்டு வந்துள்ளனர், நகர்ந்துகொண்டே போகும் தாத்தா, தியாகி தாத்தா, ஊர் தலைவர், அவருடன் சுற்றும் மனிதர்கள் இப்படி பல கேரக்டர்கள் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கின்றனர். அதிலும் படத்தின் முதல் பாதியில் நீரோட்டம் பார்க்க ஊர் மக்களே செல்லும் காட்சி சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிடும் கண்டிப்பாக.

அரசாங்கம் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் படிமத்தை காக்க கூட போரடுகிறது. ஆனால், தற்போது ஒரு சொட்டு தண்ணீருக்கே அவதிப்படும் மக்கள் வாழ்க்கையை நினைத்தார்களா என்பதை காமெடி களத்தில் பொட்டில் அடித்தார் போல் கூறியுள்ளார் சுரேஷ் சங்கையா.

ஆனால், இந்த படம் முழுவதுமே காமெடி களத்தில் செல்வதால், இரண்டாம் பாதியில் ஊர் மக்களே போலிஸாரிடம் அடிவாங்கும் காட்சி, அதையும் காமெடியாக காட்டியது ஏன்? என புரியவில்லை, அதனால் இவர்கள் வலியை ஆடியன்ஸுக்கு எப்படி கடத்துவது என்றே கேட்க தோன்றுகிறது.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசை பிரமாதம்.

க்ளாப்ஸ்

படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் பங்களிப்பு

கதைக்களம்

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

கொஞ்சம் படம் அவரசமாக முடித்தது போல் இருந்தது.

மொத்தத்தில் இந்த கெணத்த காணோம் கண்டிப்பாக மக்கள் காண வேண்டியவை.